கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சந்தோஷமாக ஊழியம் செய்யுங்கள்
ஊழியம் செய்வது கஷ்டம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் நிறைய பேர் அப்படி யோசித்திருப்போம். முன்பின் தெரியாதவர்களிடம் பேசுவது நமக்கு பயமாக இருக்கலாம். அதோடு, நம் செய்தியை மக்கள் அசட்டை செய்வதாலும் எதிர்ப்பதாலும் நாம் சோர்ந்துபோகலாம். இருந்தாலும், ஊழியத்தை நம்மால் சந்தோஷமாக செய்ய முடியும். அப்படிச் செய்ய வேண்டும் என்றுதான் நாம் வணங்கும் சந்தோஷமான கடவுளும் எதிர்பார்க்கிறார். (சங் 100:2; 1தீ 1:11) ஊழியத்தைச் சந்தோஷமாக செய்ய மூன்று காரணங்கள் இருக்கின்றன.
முதல் காரணம், மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தியை நாம் சொல்கிறோம். இன்று நிறைய பேர் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார்கள். ஆனால், சீக்கிரத்தில் “விடிவுகாலம் வரப்போகிறது!” என்ற நம்பிக்கையான செய்தியை நாம் சொல்கிறோம். (ஏசா 52:7) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி நமக்கும் சந்தோஷத்தைத் தருகிறது. ஊழியத்துக்குப் போவதற்கு முன்பு, கடவுளுடைய ஆட்சியில் இந்தப் பூமி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் நம்மால் சந்தோஷமாக ஊழியம் செய்ய முடியும்.
இரண்டாவது காரணம், இந்தச் செய்தி மக்களுக்கு நிறைய நன்மைகளைத் தருகிறது. கெட்ட பழக்கங்களை விட்டுவிட... யெகோவாவோடு நல்ல நட்பை வளர்த்துக்கொள்ள... அவர்களுக்கு உதவுகிறது. அதோடு, என்றென்றும் வாழும் நம்பிக்கையையும் தருகிறது. (ஏசா 48:17, 18; ரோ 1:16) நாம் செய்யும் வேலையை உயிர் காக்கும் வேலை என்று சொல்லலாம். நம் செய்தியை சிலர் கேட்கவில்லை என்றாலும் தப்பிப்பிழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களைத் தேடி கண்டுபிடித்து உதவுகிறோம்.—மத் 10:11-14.
பிரசங்க வேலை யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறது. இதுதான் மூன்றாவது காரணம், மிக முக்கியமான காரணமும்கூட. இந்த வேலையை அவர் உயர்வாக மதிக்கிறார். (ஏசா 43:10; எபி 6:10) அதோடு, இந்த வேலையை நாம் முழுமையாக செய்ய அவர் தன்னுடைய சக்தியைத் தாராளமாக கொடுக்கிறார். கடவுளுடைய சக்தியால் உண்டாகும் குணங்களில் ஒன்றுதான் சந்தோஷம். அதைத் தரும்படி யெகோவாவிடம் கெஞ்சி கேளுங்கள். (கலா 5:22) அவருடைய உதவி இருந்தால், நம்மால் பயமில்லாமல் தைரியமாக ஊழியம் செய்ய முடியும். (அப் 4:31) நாம் சொல்லும் நல்ல செய்தியை மக்கள் கேட்காமல் போனாலும் ஊழியத்தை நம்மால் சந்தோஷமாக செய்ய முடியும்.—எசே 3:3.
ஊழியம் செய்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா அல்லது சந்தோஷமாக இருக்கிறதா? நீங்கள் எப்படிச் சந்தோஷமாக ஊழியம் செய்யலாம்?
படிப்பு மற்றும் தியானிப்பதின் மூலம் சந்தோஷத்தை காத்துக்கொள்ளுங்கள் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ஒவ்வொரு மாதமும், நிறைய நேரம் ஊழியம் செய்தாலும் நல்ல படிப்பு பழக்கம் இருப்பது ஏன் அவசியம்?
மரியாளைப் போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?
பைபிளைப் படித்து அதை தியானிக்க நீங்கள் எப்போது நேரம் ஒதுக்குகிறீர்கள்?
ஊழியம் செய்யும்போது எது உங்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறது?