கிறிஸ்மஸ்—அதன் தோற்றம்
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு பைபிள் பூர்வமான தோற்றம் கிடையாது என்பதை 1993-ம் ஆண்டு கிறிஸ்மஸுக்கு மூன்றே மூன்று நாட்கள் இருக்கும்போது போப் இரண்டாம் ஜான் பால் ஒப்புக்கொண்டார். டிசம்பர் 25-ம் தேதியின் சம்பந்தமாக, போப் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “அந்த நாளில் பழங்கால புறமதத்தில், குளிர்கால சூரிய கதிர்த்திருப்ப சமயத்தோடு சேர்ந்து ஒரே சமயத்தில் நடப்பதற்காக ‘வெல்லமுடியாத சூரியனின்’ பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.” அப்படியானால் கிறிஸ்மஸ் தொடங்கியது எப்படி? போப் தொடர்ந்து கூறினார்: “அந்தக் கொண்டாட்டத்தை, ஒரேவொரு சூரியனும் மெய்யான சூரியனுமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் விழாவினால் மாற்றீடு செய்வதை கிறிஸ்தவர்கள் நியாயமானதாகவும் இயற்கையானதாகவும் கண்டார்கள்.”
பத்திரிகையாளர், நெல்லோ ஆஜெல்லோ, லா ரேப்பூப்ளிக்கா செய்தித்தாளில் எழுதியதாவது: “அதாவது இயேசு ஒரு கற்பனை நாளில், புனையப்பட்ட ஒரு பொய் தேதியில் பிறந்தார் என்று யாரோ அறிவித்திருக்கிறார்.” இந்தப் புனைதல் எப்பொழுது நடைபெற்றது? வாடிகனிலிருந்து வந்த செய்தி அறிக்கை ஒன்று சொன்னது: “கிறிஸ்மஸ் பண்டிகை முதன்முதலாக [பொ.ச.] 354-ல் தோன்றியது.”
புதிதாகப் பிறந்த இயேசுவைக் காணவந்த சாஸ்திரிகளின் வருகையை ஞாபகப்படுத்துகிற, இயேசுவின் தரிசன நாளாகிய, ஜனவரி 6-ம் தேதியைப்பற்றி என்ன? “இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கான ரோம விடுமுறையாக டிசம்பர் 25 தெரிந்தெடுக்கப்பட்டது போலவே, ஜனவரி 6-ம் தேதியைத் தெரிந்தெடுத்ததும்கூட ஒரு புறமத ஆண்டுவிழாவினால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருந்தது என்று நம்புவதற்கு அநேக அத்தாட்சிகள் வழிநடத்துகின்றன. அலெக்ஸாண்ட்ரியாவில் மெய்யாகவே, ஜனவரி 5 மற்றும் 6-ம் தேதி இரவுகளுக்கு இடையில் புறமதத்தினர் யுகக் கடவுளின் (காலம் மற்றும் நித்தியத்தின் கடவுளுடைய) பிறந்த நாளைக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. . . . இந்தப் பண்டிகையை சர்ச் கிறிஸ்தவமாக்கிக்கொள்ள விரும்பியதுபோல தோன்றும்,” என்பதாக அந்த அறிக்கை தொடர்ந்து கூறிற்று.
உண்மை வணக்கத்தை புறமதப் பழக்கவழக்கங்களோடு கலக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஒருபோதும் அதிகாரம் அளிக்கவில்லை. அதைவிட, “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும்” போதிக்கும்படி அவர்களிடம் கூறினார். (மத்தேயு 28:19, 20) அதுமட்டுமல்லாமல், இயேசு தம்முடைய நாளைய மதத் தலைவர்களால் எதிர்க்கப்பட்டபோது, அவர் அவர்களிடம், “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?” என்று கேட்டார். (மத்தேயு 15:3) புறமத பழக்கவழக்கங்களை இன்றும் காத்துப்பேணுகிற கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களைப் பற்றியும் இதே கேள்வியைக் கேட்டுக்கொள்வது நல்லது.