கேள்விப் பெட்டி
◼ கூட்டங்களில் பத்திகளை வாசிப்பதன்பேரில் எதை நாம் மனதில் வைத்திருக்கவேண்டும்?
காவற்கோபுர படிப்பிற்கும், சபை புத்தகப் படிப்பிற்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தில், பெரும்பங்கு பத்திகளை வாசிக்க உபயோகிக்கப்படுகிறது. அதன் அர்த்தமானது, வாசகராக நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர் ஒரு போதகராக பெரும் பொறுப்பை ஏற்றவராக இருக்கிறார். வாசகப் பொருளினுடைய ‘அர்த்தம் விளங்கும்’ விதத்தில் அவர் வாசிக்கவேண்டும், அப்போதுதான், கேட்போர் புரிந்துகொள்வதோடு மட்டுமின்றி, செயல்படவும் தூண்டப்படுவார்கள். (நெ. 8:8) எனவே தன்னுடைய நியமிப்பை நன்கு தயாரிக்கவேண்டிய தேவை வாசகருக்கு இருக்கிறது. (1 தீ. 4:13, NW; பள்ளி துணைநூல், படிப்பு 6-ஐப் பார்க்கவும்.) அர்த்தமுள்ள பொது வாசிப்பிற்கு இதோ சில முக்கிய கூறுகள்.
பொருத்தமான கருத்து அழுத்தத்தை உபயோகிக்கவும்: சரியான புரிந்துகொள்ளுதலை தெரிவிப்பதற்காக எந்த வார்த்தைகளுக்கு அல்லது எந்தச் சொற்றொடர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கவும்: பிரசுரத்தில் காணப்படும் சொற்களைச் சபையார் கிரகித்துக்கொள்ள வேண்டுமானால், சரியாக உச்சரிப்பதும் தெளிவாக கூறுவதும் அவசியமானவை. பழக்கமில்லாத அல்லது அரிதாகவே உபயோகிக்கப்படும் வார்த்தைகளை அகராதியில் பாருங்கள்.
சப்தத்தோடும் உற்சாகத்தோடும் பேசவும்: சப்தத்தோடும், உற்சாகத்தோடும் பேசுதல் ஆர்வத்தைத் தோற்றுவிக்கிறது, உணர்ச்சிகளைக் கிளறுகிறது, கேட்போரைத் தூண்டுகிறது.
கனிவுள்ளவர்களாகவும், சம்பாஷிக்கவல்லவராகவும் இருத்தல்: சரளமாக இருத்தலிலிருந்து இயல்பானத்தன்மை வருகிறது. தயாரிப்பினாலும், பயிற்சியினாலும் வாசகர் நிதானமாக இருக்கமுடியும், அதன் விளைவானது வாசிப்பு சலிப்பூட்டுவதாகவும் சோர்வூட்டுவதாகவும் இருப்பதற்கு பதிலாக மனதுக்கு இதமாக இருக்கும்.—ஆப. 2:2, NW.
அச்சடிக்கப்பட்ட பொருளை உள்ளதை உள்ளவாறே வாசிக்கவும்: அடிக்குறிப்புகளும், பிறை அடைப்புக் குறிகளிலோ அடைப்புக் குறிகளிலோ கொடுக்கப்பட்டிருக்கும் விவரமும் அச்சடிக்கப்பட்ட பாடத்தைத் தெளிவாக்கும் என்றால், பொதுவாகவே அவை சத்தமாக வாசிக்கப்படுகின்றன. எடுக்கப்பட்ட மூலத்தை வெறுமனே அடையாளம் காட்டும் குறிப்புரைகள் மாத்திரம் இதற்கு விதிவிலக்கானவை. பத்தியில் எங்கு அடிக்குறிப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அப்போது, அதற்குமுன் “அடிக்குறிப்பு வாசிப்பதாவது . . .” என்று குறிப்பிடவும். அதை வாசித்து முடித்துவிட்டபின், வெறுமனே மீதமுள்ள பத்தியைத் தொடர்ந்து வாசிக்கவும்.
பொது வாசிப்பு நன்றாகச் செய்யப்படும்போது, நமது பெரிய போதகர் ‘கட்டளையிட்ட யாவும் மற்றவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசிப்பதற்கு’ முக்கிய வழிகளில் அதுவும் ஒன்றாக இருக்கிறது.—மத். 28:20.