தொடர்ந்து பிரசங்கியுங்கள்!
1 “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” கடவுள் விரும்புகிறார். (1 தீ. 2:4) இதன் காரணமாகவே நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். (மத். 24:14) எனவே, ஏன் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும்; இந்த எண்ணம் ஊழியத்திற்குத் தடையாக இருக்கும் சோர்வையோ கவனச் சிதறல்களையோ சமாளிக்க உதவும்.
2 ஏன் விடாமுயற்சி தேவை? இன்றைய உலகில் கவனத்தை சிதறடிக்கும் காரியங்களுக்குப் பஞ்சமேயில்லை; எனவே ஜனங்கள் நாம் பிரசங்கிப்பதை கேட்டு விட்டு மறந்துவிடலாம் அல்லது அதற்கு கவனம் செலுத்தாமல் அசட்டையாக இருக்கலாம். எனவே அவர்களுக்கு கடவுளுடைய இரட்சிப்பின் செய்தியை தொடர்ந்து அறிவிக்க வேண்டும். (மத். 24:38, 39) மேலும், ஜனங்களின் வாழ்க்கையில் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஏன், உலக நிலைமைகள்கூட ஒரே இரவில் தலைகீழாக மாறலாம். (1 கொ. 7:31) இதனால் அவர்கள், அடுத்த நாளோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ புதிய பிரச்சினைகளை எதிர்ப்படலாம்; இதன் காரணமாக அவர்கள் நம் செய்திக்குக் கவனம் செலுத்தலாம். உங்களுக்கு சத்தியத்தை சொன்ன சாட்சி காட்டிய விடாமுயற்சிக்கு நீங்களும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் அல்லவா?
3 கடவுளுடைய இரக்கத்தைப் பின்பற்றுவதற்கு: பொல்லாதவர்களை நியாயந்தீர்ப்பதற்கு முன்பு யெகோவா பொறுமையுடன் காலத்தை அனுமதித்திருக்கிறார். யெகோவா நம்மை உபயோகித்து, நல்மனமுள்ள ஆட்களை தம்மிடம் வரும்படியும் தப்பிப்பிழைக்கும்படியும் தொடர்ந்து அழைக்கிறார். (2 பே. 3:9) கடவுளுடைய இரக்கத்தின் செய்தியையும், பொல்லாத வழிகளை விட்டு விலகாதவர்களின் மீதான அவருடைய நியாயத்தீர்ப்பின் செய்தியையும் குறித்து ஜனங்களுக்கு அறிவிக்கவில்லை என்றால் அவர்களுடைய இரத்தப்பழி நம்மீது வரும். (எசே. 33:1-11) நாம் பிரசங்கிப்பதை எப்போதும் எல்லாரும் ஆர்வத்தோடு கேட்பார்கள் என சொல்ல முடியாது; இருந்தாலும், கடவுளின் ஒப்பற்ற இரக்கத்தை போற்றும்படி நல்மனமுள்ளவர்களுக்கு உதவும் முயற்சியில் ஒருபோதும் அசட்டையாக இருக்கக்கூடாது.—அப். 20:26, 27; ரோ. 12:11.
4 நம் அன்பை வெளிக்காட்டுவதற்கு: நற்செய்தி எங்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதே யெகோவா தேவனின் விருப்பம்; இதை அவர் இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்குக் கட்டளையாக கொடுத்திருக்கிறார். (மத். 28:19, 20) ஜனங்கள் செவிகொடுத்து கேட்காவிட்டாலும் சரியானதை செய்வதில் நமக்கு விடாமுயற்சி தேவை; இதன் மூலம் கடவுளுக்கான நம் அன்பையும் பக்தியையும் வெளிக்காட்ட வாய்ப்பிருக்கிறது.—1 யோ. 5:3.
5 தொடர்ந்து பிரசங்கிக்க தீர்மானமாய் இருப்போமாக. யெகோவா ‘இரட்சிப்பின் நாளை’ இன்னும் அனுமதித்திருக்கும் இந்நாட்களில் ஆர்வத்துடன் ஊழியத்தைத் தொடருவோமாக.—2 கொ. 6:2, NW.