வார்த்தைகள் ஆயுதங்களாகும்போது
“பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு.”—நீதிமொழிகள் 12:18.
கல்யாணமாகி சில வாரங்களுக்குள்ளாகவே, அது ஆரம்பித்துவிட்டது,” என்பதாக இலேன் சொல்கிறாள். a “ஈவு இரக்கமில்லாத வார்த்தைகள், மட்டந்தட்டுகிற பேச்சுகள், என்னை அவமானப்படுத்துவற்கான முயற்சிகள். என் வீட்டுக்காரருக்கு நான் கொஞ்சம்கூட பொருத்தமானவளாக இல்லை. சட்டென்று எடைபோடும் அவரது மனதும் சட்டென்று அவர் பேசும் பேச்சும் நான் சொன்ன எல்லாவற்றையும் அப்படியே புரட்டிவிடும்.”
இலேன், தனது திருமண வாழ்க்கை முழுக்கமுழுக்க, தழும்புகளை ஏற்படுத்தாததும் அவ்வளவு அனுதாபத்தைப் பெறாததுமான மறைவான தாக்குதலுக்கு ஆளாகிவந்திருக்கிறாள். துக்ககரமாக, காலம் கடந்தபின்பும் அவளது நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. “எங்களுக்கு திருமணமாகி இப்போது 12 வருஷத்துக்கும் மேலாகிறது. அவர், கடுமையான, ஆபாசமான வார்த்தைகளால் என்னைக் குறைசொல்லி, குத்தலாக பேசாத நாளே கிடையாது,” என்பதாக அவள் சொல்கிறாள்.
நாவு, ‘அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கலாம்’ என்பதாக சொல்லுகையில், பைபிள் மிகைப்படுத்திப் பேசவில்லை. (யாக்கோபு 3:8; சங்கீதம் 140:3-ஐ ஒப்பிடுக.) இது விசேஷமாக திருமணத்தில் உண்மையாயிருக்கிறது. “ ‘தடிகளும் கற்களும் என் எலும்புகளை உடைக்கலாம், ஆனால் வார்த்தைகள் என்னை ஒருபோதும் புண்படுத்தாது’ என்று சொன்ன எவரும் நூற்றுக்குநூறு தவறாக இருக்கிறார்,” என்பதாக லிசா என்ற பெயர்கொண்ட ஒரு மனைவி சொல்கிறாள்.—நீதிமொழிகள் 15:4.
கணவன்மாரும் சொற்தாக்குதலுக்கு இலக்காகலாம். “எப்போதுபார்த்தாலும் உங்களை புளுகுணி, அறிவுகெட்ட முட்டாள் அல்லது இன்னும் மோசமான வார்த்தைகளால் திட்டும் ஒரு பொம்பளைகூட வாழ்வது எப்படியிருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?” என்பதாக மைக் கேட்கிறார்; ட்ரேசியுடன் அவரது நான்கு வருட தாம்பத்திய வாழ்க்கை, விவாகரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. “அவள் என்னிடம் சொல்வதை கண்ணியமான கூட்டாளிகள் மத்தியில் நான் திரும்பச் சொல்ல முடியாது. அவளோடு என்னால் பேசமுடியாததற்கும் இதுதான் காரணம், இவ்வளவு லேட்டாகியும் நான் வேலைபார்க்கும் இடத்திலேயே இருப்பதற்கும் இதுதான் காரணம். வீட்டுக்கு வருகிறதைவிட அது எவ்வளவோ நிம்மதியான ஒன்று.”—நீதிமொழிகள் 27:15.
பலமான காரணங்களுடன், கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “கூக்குரலும், தூஷணமும், . . . உங்களைவிட்டு நீங்கக்கடவது.” (எபேசியர் 4:31) ஆனால் ‘தூஷணம்’ என்பது என்ன? பவுல் அதை, வெறுமனே குரலை உயர்த்துவதை அர்த்தப்படுத்தும் ‘கூக்குரலிலிருந்து’ (கிரேக்கில், க்ராகே) வேறுபடுத்திக் காண்பிக்கிறார். ‘தூஷணம்’ (கிரேக்கில், ப்ளாஸ்ஃபேமியா), பேச்சிலுள்ள விஷயத்தை அதிகமாக குறிப்பிடுகிறது. கூச்சலிட்டு சொல்லப்பட்டாலும்சரி தாழ்குரலில் சொல்லப்பட்டாலும்சரி, அது கொடூரமாக, குரோதமாக, தரக்குறைவாக அல்லது புண்படுத்துவதாக இருந்தால், அது தூஷணமாகும்.
வார்த்தைகளின் காயங்கள்
கடல் அலைகள் எவ்வாறு பாறையை அரிக்கக்கூடுமோ அவ்வாறே கடுமையான பேச்சுப் பாணியும் ஒரு திருமணத்தை பலவீனப்படுத்தக்கூடும். டாக்டர் டானியல் கோல்மன் இவ்வாறு எழுதுகிறார்: “அது எவ்வளவுக்கெவ்வளவு கடுமையானதாகவும் நாள்பட்டதாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஆபத்தும் அதிகமாக இருக்கிறது. . . . வழக்கமான குற்றம் கண்டுபிடித்தல், அவமதிப்பு அல்லது வெறுப்பு ஆகியவை ஆபத்துக்கான அறிகுறிகள்; ஏனெனில், ஒரு கணவனோ மனைவியோ ஏற்கெனவே தங்கள் துணையை மோசமானவர்களென மௌனமாக முடிவுகட்டிவிட்டனர் என்பதை அவை சுட்டிக்காண்பிக்கின்றன.” பாசம் குறைந்துவிடும்போது, ஒரு புத்தகம் சொல்லுகிறபிரகாரமாக, கணவனும் மனைவியும் “சட்டப்பூர்வமாய் திருமணமானவர்களாக, ஆனால் உணர்ச்சிப்பூர்வமாய் திருமணமாகாதவர்களாக” ஆகின்றனர். காலப்போக்கில், அவர்கள் விவாகரத்தானவர்களாக ஆகலாம்.
எனினும், வசைப் பேச்சு, திருமணத்தை மாத்திரமல்லாமல் அதைக் காட்டிலும் அதிகத்தையும் பாதிக்கக்கூடும். பைபிள் பழமொழி ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.” (நீதிமொழிகள் 15:13) தொடர்ந்து சரமாரியாக சொல்லப்படும் புண்படுத்துகிற வார்த்தைகளினால் ஏற்படும் மன அழுத்தம், ஒருவருடைய ஆரோக்கியத்தின்பேரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தால் (அ.ஐ.மா.) நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி, எப்போதும் திட்டப்படும் ஒரு பெண், ஜலதோஷம், சிறுநீர்ப்பை பிரச்சினைகள், ஈஸ்ட் தொற்றுநோய்கள், இரைப்பைக்குடல் கோளாறுகள் (gastrointestinal disorders) ஆகியவற்றால் அதிகமாக பாதிக்கப்படலாம் என்பதை வெளிக்காட்டியது.
சொற்தாக்குதலையும் சரீரப்பிரகாரமான கடும் தாக்குதலையும் சகித்திருக்கும் அநேக மனைவிகள், கைமுஷ்டிகளைவிட வார்த்தைகள் அதிகமாக புண்படுத்தும் என்பதாக சொல்கின்றனர். “அவர் அறைந்ததால் ஏற்பட்ட காயங்கள் இறுதியில் ஆறி மறைந்துவிடும், ஆனால் என் தோற்றத்தைப் பற்றியும் நான் சமைக்கும் விதத்தைப் பற்றியும் பிள்ளைகளை நான் கவனித்துக்கொள்ளும் விதத்தைப் பற்றியும் அவர் சொன்ன அசிங்கமான காரியங்களை என்னால் ஒருபோதும், ஒருபோதும் மறக்கவே முடியாது,” என்பதாக பெவர்லி சொல்கிறாள். ஜூல்யா கிட்டத்தட்ட இதேவிதமாகவே உணருகிறாள். “நான் சொல்வது பைத்தியக்காரத்தனமாக தோன்றுகிறதென்று எனக்கு தெரியும், ஆனால் இந்த மன சித்திரவதையை பல மணிநேரங்களாக அனுபவிப்பதைக் காட்டிலும் அவர் என்னை அடித்து, பின் அதிலிருந்து குணமடைவதையே மேலானதாக நான் நினைக்கிறேன்,” என அவள் சொல்கிறாள்.
ஆனால் தாங்கள் நேசிப்பதாக சொல்லும் ஒருவரை ஏன் சில ஜனங்கள் கோபாவேசப்பட்டு கசப்பான வார்த்தைகளால் பொரிந்து தள்ளுகின்றனர்? பின்வரும் கட்டுரை இந்தக் கேள்வியைக் கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரைத் தொடரிலுள்ள சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
“இந்த மன சித்திரவதையை பல மணிநேரங்களாக அனுபவிப்பதைக் காட்டிலும் அவர் என்னை அடித்து, பின் அதிலிருந்து குணமடைவதையே மேலானதாக நான் நினைக்கிறேன்”
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
“எப்போதுபார்த்தாலும் உங்களை புளுகுணி, அறிவுகெட்ட முட்டாள் அல்லது இன்னும் மோசமான வார்த்தைகளால் திட்டும் ஒரு பொம்பளைகூட வாழ்வது எப்படியிருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?”