இளமையில் மரிப்பதன் அவலம்
“எங்க ஜெனரேஷனே செத்துக்கிட்டு இருக்குன்னு எனக்கு தோனுது.”—ஜோஹன்னா பி., அ.ஐ.மா., கனெடிகட்டிலுள்ள 18 வயது நிரம்பிய முதலாண்டு கல்லூரி மாணவி.
ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான டாஸ்மேனியாவின் தலைநகரம் ஹோபர்ட். அங்கிருந்து சற்று தொலைவிலிருந்த பண்ணையில் குலை நடுங்கவைக்கும் ஒரு காட்சியை போலீஸார் கண்டனர். 10 முதல் 18 வயது நிரம்பிய நான்கு பெண்கள் அந்த வீட்டில் இருந்தனர். அவர்கள் அனைவரையும் அவர்களுடைய தகப்பனே கொலைசெய்திருந்தார். தலையில் துப்பாக்கி குண்டு காயத்துடன் அவர் அருகிலேயே கிடந்தார். அவர் தன் வலதுகையை ஒரு கோடாரியால் துண்டித்திருந்தார். இந்தக் கொலை-தற்கொலை டாஸ்மேனியா முழுவதையுமே உலுக்கியது. ஏன் இப்படி நடந்தது? இந்த நான்கு அப்பாவி சிறுமிகளுக்கு ஏன் இப்படியொரு மரணம்? என்ற புதிரான கேள்விகள் ஜனங்களின் மனதில் எழுந்தன.
பெல்ஜியத்தில் நடந்த மற்றொரு சம்பவம். பரோலில் விடுவிக்கப்பட்டிருந்த கற்பழிப்பு குற்றவாளி ஒருவன் ஆறு இளம் பெண்களை கற்பழித்து அவர்களில் நான்கு பேரை கொலை செய்தான். அதனால் பெல்ஜியமே நிலைகுலைந்து போயிருக்கிறது. மறுபடியும் அதே கேள்வி எழும்புகிறது: ஏன்? இழிவான போர்a என இப்போது அழைக்கப்படும் போர் அர்ஜன்டினாவில் நடந்தது. அதில், தங்கள் மகன்களும் மகள்களும் உட்பட 30,000 மக்கள் இறந்துபோனார்கள் என சில தாய்மார்கள் நம்புகின்றனர். அவர்களில் சிலர் சித்திரவதை செய்யப்பட்டு, போதைப்பொருள் கொடுக்கப்பட்டு, விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டு நடுக்கடலில் தள்ளப்பட்டனர். அவர்களில் அநேகர் உயிருடன் இருக்கும்போதே தள்ளிவிடப்பட்டனர். அவர்கள் ஏன் மரித்தனர்? விடை கிடைக்காதா என்று அவர்களின் அம்மாக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்.
1955-ல் உலக தாய்மார்களின் சம்மேளனம், போரின் பயனற்ற தன்மையைக் கண்டனம் செய்தது. மேலும், அந்தச் சம்மேளனமே “மக்களின் குரல்; போரும் போருக்கான தயாரிப்புகளும் ஏற்படுத்தும் துயரங்களிலிருந்து தங்கள் சிறிய பிள்ளைகளையும் பெரிய பிள்ளைகளையும் காப்பாற்ற முயலும் எல்லா பெண்களும் எழுப்பும் எச்சரிப்பின் குரல்” என அது அறிவித்தது. இதற்கு நேர்மாறாக, அந்தச் சம்மேளனம் நடந்த சமயத்திலிருந்து இன்றுவரையாக உலகமுழுவதும் இரத்த வெள்ளத்தில் இறந்துபோன இளைஞரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது; திறமையான ஒரு சந்ததி மனிதவர்க்கத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது.
இளவயது மரணங்களின் நீண்ட சரித்திரம்
சரித்திரத்தின் பக்கங்கள் அனைத்தும் இளைஞரின் இரத்தத்தால் கறைபடிந்திருக்கின்றன. அறிவொளி சகாப்தம் என்றழைக்கப்படும் இந்த 20-ம் நூற்றாண்டிலும்கூட இனம் மற்றும் குலம் சார்ந்த சண்டைகளில் இளைஞரே படுகொலைக்கு இலக்காகின்றனர். தங்களைவிட மூத்தவர்களின் தவறுகளுக்கும் விருப்பங்களுக்கும் விலையாக இளைஞர் தங்கள் உயிரைக் கொடுக்கிறார்கள் என்பதாக தோன்றுகிறது.
ஓர் ஆப்பிரிக்க நாட்டில், கர்த்தரின் எதிர்ப்புப் படை என தங்களை அழைத்துக்கொள்ளும் டீனேஜ் மத சிப்பாய்களின் குழு ஒன்று இருக்கிறது; துப்பாக்கி குண்டுகள் அவர்களைத் துளைக்காது என நம்பும்படி அவர்கள் போதிக்கப்பட்டிருப்பதாக த நியூ ரிபப்ளிக் பத்திரிகை அறிக்கையிடுகிறது. ஆகவே, “டீனேஜ் பாலைநிலம்” என்று அந்தக் கட்டுரை தலைப்பிடப்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! உண்மையில் புல்லட்-புரூஃப்பாக இல்லாத தங்கள் மகன்களையும் மகள்களையும் இழந்த குடும்பத்தினர் கேட்கின்றனர்: எங்கள் பிள்ளைகள் ஏன் இறந்தனர்? இதற்கெல்லாம் என்ன காரணம்?
இந்த அவலமும் துன்பமும் போதாதென்பதுபோல, இளைஞரிடையே தற்கொலையும் தன் பங்கிற்கு உயிர்களைக் காவுகொள்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a இழிவான போர் என்பது ஒரு ராணுவ ஆட்சியின்போது (1976-83) நடந்தது; ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் அப்போது கொல்லப்பட்டனர். சில கணக்குகள்படி 10,000 முதல் 15,000 பேர் இறந்தார்கள்.