தலைசிறந்த தலைமை—உலகளாவிய சவால்
அவர் ஓர் எழுத்தாளர், கவிஞர். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை அவருடைய இதயத்தில் ஒளிவீசிக் கொண்டிருந்தது. “எங்கே மனம் அச்சமற்றும் தலை நிமிர்ந்தும் இருக்கிறதோ, எங்கே அறிவு இலவசமாக கிடைக்கிறதோ, எங்கே குறுகிய மனப்பான்மையால் உலகம் பங்கு போடப்படாமலிருக்கிறதோ, எங்கே வாய்மை மொழியாகியிருக்கிறதோ, எங்கே கைகளின் பலன் பரிபூரணத்தை நெருங்குகிறதோ” அப்படிப்பட்ட ஓர் இடத்தை அவர் சுமார் 90 வருடங்களுக்கு முன்பு கற்பனை செய்தார்.
ஒருநாள் தன் நாட்டவரும் உலகிலுள்ள மற்றவர்களும் இத்தகைய உலகில் விழித்தெழுவார்கள் என்ற தன்னுடைய நம்பிக்கையை இந்த எழுத்தாளர் வெளிப்படுத்தினார். நோபல் பரிசு பெற்ற இந்தக் கவிஞர் இன்று உயிருடனிருந்தால் உண்மையில் பெரும் ஏமாற்றத்தையே அடைந்திருப்பார். உலகம் தடைகளைத் தகர்த்தெறிந்து பல முன்னேற்றங்களை செய்திருக்கிறபோதிலும், ஒருபோதும் இல்லாதளவுக்கு பிளவுபட்டிருக்கிறது. மொத்தத்தில் மனிதனின் எதிர்கால நம்பிக்கை எனும் ஒளி மங்கலாக தெரிகிறது.
ஒரு விவசாயியிடம் அவருடைய நாட்டில் ஏன் சில தொகுதிகளுக்கிடையே திடீரென வன்முறை தலைதூக்குகிறது என கேட்டபோது, “ஊழல்மிக்க தலைவர்களே ஒரு காரணம்” என நினைப்பதாக அவர் குறிப்பிட்டார். மனிதகுலம்—இருபதாம் நூற்றாண்டின் தார்மீக சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் சரித்திராசிரியர் ஜானத்தன் க்ளோவர் இதே போன்ற கருத்தை தெரிவிக்கிறார். அவர் சொல்கிறதாவது: [அந்த நாட்டில்] “இனப் பகைமை திடீரென தலைதூக்கியதால் படுகொலை நிகழவில்லை. அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பியவர்களால் அது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது.”
1990-களின் ஆரம்பத்தில் முன்னாள் யுகோஸ்லாவியாவின் இரு குடியரசுகளுக்கு இடையே போர் மூண்டபோது, ஓர் இதழியலாளர் இவ்வாறு எழுதினார்: “ஆண்டாண்டு காலமாக எல்லாரும் ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழ்ந்தோம், இன்றோ ஒருவர் மற்றொருவருடைய பச்சிளங்குழந்தைகளைக் கொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. நாங்கள் ஏன்தான் இப்படி நடந்துகொள்கிறோமோ தெரியவில்லையே.”
ஐரோப்பாவிலிருந்தும் ஆப்பிரிக்காவிலிருந்தும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்திய நாடு. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்தக் கவிஞர் பிறந்த நாடும் இதுவே. “இந்தியா ஐக்கியப்பட்ட ஒரே நாடாக திகழுமா?” என்று தலைப்பிடப்பட்ட உரையில் எழுத்தாளர் பிரானை குப்தே குறிப்பிட்டதாவது: ‘இந்தியாவின் பெரும் ஜனத்தொகையில் சுமார் 70 சதவீதத்தினர் 30 வயதை எட்டாதவர்களாக இருக்கிறார்கள், எனினும் பார்த்துப் பின்பற்றத்தக்க உதாரண புருஷர்களாய் திகழும் எந்தத் தலைவரும் அவர்களுக்கு இல்லை.’
சில நாடுகளில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு காரணங்களால், தலைமை வகிக்க தலைவரில்லாத குறையில் உலகம் தத்தளிப்பது தெளிவாகவே தெரிகிறது. சுமார் 2,600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளின் உண்மைத்தன்மையை உலக நிலைமைகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும்” அவர் சொன்னார்.—எரேமியா 10:23.
இன்றைய உலகின் வேதனைமிக்க நிலைக்கு தீர்வு காண முடியுமா? சண்டை சச்சரவால் அல்லல்படாத, பயத்தால் பாரமடையாத, இலவசமாகவும் ஏராளமாகவும் உண்மையான அறிவு கிடைக்கிற, மனிதயினம் பரிபூரணத்தை நோக்கி முன்னேறுகிற ஓர் உலகிற்கு மனிதகுலத்தை யார் வழிநடத்தி செல்ல முடியும்?
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Fatmir Boshnjaku