உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• நேர்மை வழியிலிருந்து விலகாதிருக்க உதவும் மூன்று முக்கிய அம்சங்கள் யாவை?
அவை: (1) நியாயமான தேவபயத்தை வளர்ப்பது. (1 பே. 3:12) (2) பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை வளர்ப்பது. (3) மனதிருப்தி பெறக் கடினமாக முயற்சி செய்வது.—4/15, பக்கங்கள் 6-7.
• பொறுப்புடன் கடவுளைச் சேவிப்பது என்றால், முகத்தை ‘உர்’ என்று வைக்க வேண்டும் என்றோ ஓய்வெடுக்கக் கூடாது என்றோ அர்த்தமாகாதென எப்படிச் சொல்லலாம்?
இயேசுவின் உதாரணத்தைச் சிந்தித்துப் பார்க்கலாம். அவர் ஓய்வான சூழலில் மற்றவர்களோடு சேர்ந்து உணவருந்தினார். அவர் முகத்தை ‘உர்’ என்றோ கடுகடு என்றோ வைத்துக்கொள்ளவில்லை என நமக்குத் தெரியும். மற்றவர்களும், ஏன் குழந்தைகளும்கூட, தயக்கமின்றி அவரிடம் நெருங்கி வந்தார்கள்.—4/15, பக்கம் 10.
• ரோமர் 11-ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒலிவ மரம் எதை அடையாளப்படுத்துகிறது?
ஒலிவ மரம் ஆபிரகாமுடைய சந்ததியின் இரண்டாம் பாகத்தை, அதாவது அடையாளப்பூர்வ இஸ்ரவேலரை, குறிக்கிறது. அதன் வேர் யெகோவாவையும், அதன் அடிமரம் இயேசுவையும் அடையாளப்படுத்துகிறது. பூர்வ யூதர்களில் பெரும்பாலோர் இயேசுவை நிராகரித்தபோது, விசுவாசிகளான புறதேசத்தார் அந்த அடையாளப்பூர்வ ஒலிவ மரத்தில் ஒட்ட வைக்கப்பட்டார்கள்; இவ்வாறு, ஆபிரகாமுடைய சந்ததியின் இரண்டாம் பாகத்தின் எண்ணிக்கை நிறைவடைந்தது.—5/15, பக்கங்கள் 22-25.
• பரிபூரண மனிதரான இயேசுவால் பெற்றெடுத்திருக்க முடிந்த சந்ததியினர் மீட்புப் பலியின் பாகமாக ஆகியிருக்க முடியுமா?
முடியாது. கோடிக்கணக்கான பரிபூரண பிள்ளைகளை இயேசுவால் பெற்றெடுத்திருக்க முடிந்திருக்கும் என்றாலும் அவர்கள் மீட்புப் பலியின் பாகமாக ஆகியிருக்க முடியாது. இயேசுவின் பரிபூரண உயிர் மட்டுமே ஆதாமின் உயிருக்குச் சரிசமமானதாக இருந்தது. (1 தீ. 2:6)—6/15, பக்கம் 13.
• அப்போஸ்தலர் 20:29, 30-ல் உள்ள போலிப் போதகர்களைப் பற்றிய எச்சரிக்கைக்குச் செவிசாய்ப்பதைக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு காட்டலாம்?
போலிப் போதகர்களை அவர்கள் தங்கள் வீட்டுக்குள் அழைப்பதும் இல்லை, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதும் இல்லை. (ரோ. 16:17; 2 யோ. 9-11) விசுவாசதுரோகிகளின் பிரசுரங்கள், அவர்களைப் பற்றிய டிவி நிகழ்ச்சிகள், அவர்களுடைய வெப்சைட்டுகள் போன்றவற்றைக் கிறிஸ்தவர்கள் தவிர்க்கிறார்கள்.—7/15, பக்கங்கள் 15-16.