கேள்விப் பெட்டி
◼ கூட்டங்களின்போதும், ஊழியத்தின்போதும் செல்ஃபோன்களை உபயோகிப்பது சம்பந்தமாக எந்த பைபிள் நியமங்களைப் பொருத்தலாம்?
“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு.” (பிர. 3:1): எந்த நேரம் வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப, மற்றவர்களிடம் பேச கைகொடுக்கிற சாதனம் செல்ஃபோன். என்றாலும், சில சமயங்களில் அது நம்மைத் திசைதிருப்பி விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, சபைக் கூட்டங்களில்! ஏனென்றால், யெகோவாவை வழிபடுவதற்கும், ஆன்மீக அறிவுரைகளைப் பெறுவதற்கும், ஒருவருக்கொருவர் ஊக்கம் பெறுவதற்குமான சமயங்கள் அவை. (உபா. 31:12; சங். 22:22; ரோ. 1:11, 12) எனவே, கூட்டங்களின்போது செல்ஃபோனை ஆஃப் செய்துவிடுவது நல்லது. அவசரத் தேவைக்காக அதை ஆன் செய்து வைக்க வேண்டியிருந்தால், பிறருக்குத் தொந்தரவு ஏற்படாத விதத்தில் அதன் செட்டிங்கை மாற்றி வைக்க வேண்டும்.
‘எல்லாவற்றையும் நற்செய்திக்காகவே செய்யுங்கள்.’ (1 கொ 9:23): ஊழியத்தின்போது செல்ஃபோனைப் பயன்படுத்துவது சிலசமயம் ரொம்பவே பிரயோஜனமாய் இருக்கும். உதாரணத்திற்கு, முன்நின்று நடத்தும் சகோதரர் மற்ற பிரஸ்தாபிகளைத் தொடர்புகொள்ள... பிராந்தியத்தில் கும்பல் சேரும் ஆபத்து ஏற்படும்போது பிரஸ்தாபிகளை எச்சரிக்க... நாம் தாக்கப்படும்போது அல்லது போலீஸார் நம்மை விசாரிக்கும்போது மூப்பர்களைத் தொடர்புகொள்ள... தூரமான பகுதியில் வசிக்கும் ஆர்வமுள்ள நபரை அல்லது பைபிள் மாணாக்கரைச் சந்திப்பதற்குமுன் அவர்களைத் தொடர்புகொள்ள... அதைப் பயன்படுத்தலாம். ஆனால், ஊழியத்தில் வீட்டுக்காரரிடம் பேசும்போது அது நமக்கு இடையூறாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். (2 கொ. 6:3) நம்மோடு இருக்கும் பிரஸ்தாபி வீட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நாம் ஃபோன் செய்துகொண்டோ எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டோ இருக்காமல், பிரஸ்தாபியின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவது எவ்வளவு நல்லது!
மற்றவர்களுக்கு மதிப்பு காட்டுங்கள். (1 கொ. 10:24; பிலி. 2:4): பிரஸ்தாபிகள் எந்த இடத்தில் ஊழியம் செய்கிறார்கள் என்பதை ஃபோன் செய்து அல்லது எஸ்எம்எஸ் அனுப்பி தெரிந்துகொள்ளலாம் என்ற நினைப்பில், வெளி ஊழியக் கூட்டத்திற்கு நாம் தாமதமாகச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால், ஏற்கெனவே பிரித்துவிடப்பட்ட பிரஸ்தாபிகளை மீண்டும் பிரித்து வேறொருவருடன் அனுப்ப வேண்டியிருக்கும். சிலசமயம், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நாம் தாமதமாகச் செல்ல நேரிடும். என்றாலும், சரியான நேரத்திற்கு வருவதை நாம் பழக்கமாக்கிக்கொண்டால், யெகோவாவின் ஏற்பாட்டிற்கும் முன்நின்று வழிநடத்துகிற சகோதரருக்கும் சக பிரஸ்தாபிகளுக்கும் மதிப்பு காட்டுபவர்களாய் இருப்போம்.