உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• ஒற்றுணர்வு என்றால் என்ன, அதை ஏன் கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்?
அது மற்றவரின் நிலையில் நம்மை வைத்துப் பார்க்கும் திறமை, அதாவது மற்றொருவரின் வலியை நம் இருதயத்தில் உணருவது. “பிறரிடம் பரிவு, சகோதர அன்பு, இரக்கம்” ஆகியவற்றை காட்டும்படி கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. (1 பேதுரு 3:8, தமிழ் கத்தோலிக்க பைபிள்) ஒற்றுணர்வு காட்டுவதில் யெகோவா நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைக்கிறார். (சங்கீதம் 103:14; சகரியா 2:8, NW) இந்த விஷயத்தில், செவிகொடுத்துக் கேட்பது, கூர்ந்து கவனிப்பது, கற்பனை செய்து பார்ப்பது ஆகியவற்றின் மூலம் நம் ஒற்றுணர்வு திறனை மேன்மேலும் வளர்த்துக்கொள்ளலாம்.—4/15, பக்கங்கள் 24-6.
• உண்மையான சந்தோஷத்தைப் பெற, சரீர ஊனம் முற்றிலும் நீக்கப்படுவதற்கு முன்பு ஏன் ஆன்மீக சுகப்படுத்துதல் அவசியம்?
உடல் ரீதியில் திடகாத்திரமாக இருக்கிற பலரிடத்தில் மகிழ்ச்சி இல்லை, பல பிரச்சினைகளில் அல்லல்படுகிறார்கள். அதற்கு மாறாக, இன்று சரீர ஊனமுற்ற பல கிறிஸ்தவர்கள் அதிக மகிழ்ச்சியோடு யெகோவாவை சேவிக்கிறார்கள். ஆன்மீக சுகப்படுத்துதலிலிருந்து பயனடைகிறவர்களுக்குப் புதிய உலகில் சரீர ஊனத்திலிருந்து சுகமடையும் வாய்ப்பு இருக்கிறது.—5/1, பக்கங்கள் 6, 7.
• எபிரெயர் 12:16 ஏசாவை ஏன் வேசிக்கள்ளரோடு வரிசைப்படுத்துகிறது?
உடனடியாக பலன்களைப் பெற தன் மனதை ஒருமுகப்படுத்துபவராக பரிசுத்த காரியங்களை ஏசா அசட்டை செய்தார் என பைபிள் பதிவு காட்டுகிறது. அத்தகைய மனநிலை வளர்வதற்கு இன்று யாரேனும் இடங்கொடுத்தால் அது வேசித்தனம் போன்ற படுமோசமான பாவத்துக்கு வழிநடத்தலாம்.—5/1, பக்கங்கள் 10-11.
• டெர்ட்டுல்லியன் யார், அவர் எதற்கு பெயர் பெற்றவர்?
இவர் பொ.ச. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த எழுத்தாளரும் இறையியல் வல்லுநரும் ஆவார். பெயர் கிறிஸ்தவத்தை ஆதரிக்கும் அநேக புத்தகங்களை எழுதிய பெருமைக்குரியவர். தன் வாதத்தை ஆதரித்துப் பேசுகையில், திரித்துவம் போன்ற கறைப்பட்ட கொள்கைகளுக்கு அடிப்படையாய் அமைந்த கருத்துக்களையும் தத்துவங்களையும் அறிமுகப்படுத்தினார்.—5/15, பக்கங்கள் 29-31.
• மனிதரின் நோய்களுக்கும், நடத்தைக்கும், மரணத்துக்கும் ஏன் மரபுவழிப் பண்பியல்பே முழுக்க முழுக்க காரணமல்ல?
பல்வேறு நோய்களுக்கு ஜீன் ஒருவிதத்தில் காரணமாக இருப்பதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்; நம்முடைய ஜீன்களே நடத்தையை தீர்மானிப்பவை எனவும் சிலர் நம்புகிறார்கள். எனினும், மனிதகுலத்தை துன்பத்துக்கு ஆளாக்கிய பாவம், அபூரணம் உட்பட மனிதனின் ஆரம்பம் சம்பந்தமான உட்பார்வையை பைபிள் அளிக்கிறது. நம்முடைய ஆளுமையை வடிவமைப்பதில் ஜீன்களுக்கு பங்கிருந்தாலும் நம்முடைய அபூரணமும் சுற்றுச்சூழலும்கூட அவற்றில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன.—6/1, பக்கங்கள் 9-11.
• எகிப்திலுள்ள ஆக்ஸிரின்கஸில் கண்டுபிடிக்கப்பட்ட நாணற்புல் தாளின் துண்டு கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டதை எப்படி வெட்டவெளிச்சமாக்கியது?
கிரேக்க செப்டுவஜின்ட் பைபிளிலுள்ள யோபு 42:11, 12-ன் ஒரு பகுதியில் திருநான்கெழுத்துக்கள் (கடவுளுடைய பெயருக்கான நான்கு எபிரெய எழுத்துக்கள்) உள்ளன. எபிரெயுவிலுள்ள கடவுளுடைய பெயர் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்புகளில் காணப்பட்டது என்பதற்கும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டது என்பதற்கும் இது மேலுமான ஆதாரம் ஆகும்.—6/1, பக்கம் 30.
• ரோம சாம்ராஜ்யத்தில் நடைபெற்ற வன்முறைமிக்க, சாவுக்கேதுவான அரங்க நிகழ்ச்சிகள் எந்த நவீன நாளைய அரங்க பொழுதுபோக்குகளுக்கு இணையாக உள்ளன?
இத்தாலியிலுள்ள ரோமில் கொலோசியத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சி நவீன நாளில் அவற்றிற்கு இணையாக இருப்பவற்றை சுட்டிக்காட்டின. அதில், காளை சண்டை, குத்துச்சண்டை, ஆட்டோ மற்றும் மோட்டார்-சைக்கிள் பந்தயம், நவீன விளையாட்டு நிகழ்ச்சிகளில் நடக்கும் பார்வையாளர்களின் ஆர்ப்பாட்ட கைகலப்புகள் போன்றவற்றை சித்தரிக்கும் வீடியோ காட்சி தொகுப்புகள் சேர்க்கப்பட்டிருந்தன. யெகோவா வன்முறையையோ வன்முறையாளர்களையோ நேசிப்பதில்லை என்பதை ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் மனதில் வைத்தனர், இன்றைய கிறிஸ்தவர்களும் அவ்வாறே மனதில் வைக்கிறார்கள். (சங்கீதம் 11:5, பொது மொழிபெயர்ப்பு)—6/15, பக்கம் 29.
• நாம் திறம்பட்ட போதகர்களாக முயலுகையில் எஸ்றாவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
எஸ்றா பின்பற்றிய நான்கு காரியங்களை எஸ்றா 7:10 சிறப்பித்துக் காட்டுகிறது; அவற்றையே நாமும் பின்பற்ற முயலலாம். அது சொல்வதாவது: ‘எஸ்றா தன் இருதயத்தை [1] பக்குவப்படுத்தி கர்த்தருடைய வேதத்தை [2] ஆராயவும், அதின்படி [3] செய்யவும், இஸ்ரவேலருக்கு கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் [4] உபதேசிக்கவும் செய்தார்.’—7/1, பக்கம் 20.
• என்ன இரண்டு காரியங்களை செய்கையில் கிறிஸ்தவ பெண் தலைக்கு முக்காடிடுவது பொருத்தமானது?
ஒன்று, வீட்டில் அதற்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அவள் தலைக்கு முக்காடிடுகிறாள். அவ்வாறு முக்காடிடுவது தன்னுடைய கணவன் ஜெபிப்பதிலும் பைபிளை போதிப்பதிலும் தலைமைதாங்கி வழிநடத்த பொறுப்புள்ளவர் என அவள் மதிப்பதை வெளிக்காட்டுகிறது. மற்றொன்று சபை காரியங்களில் ஈடுபடும்போது; அப்போது போதிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் முழுக்காட்டப்பட்ட ஆண்கள் வேதப்பூர்வ அதிகாரம் பெற்றவர்கள் என அவள் மதித்துணர்வதைக் காட்டுகிறாள். (1 கொரிந்தியர் 11:3-10)—7/15, பக்கங்கள் 26-7.
• யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல, அது ஆபத்தானது என கிறிஸ்தவர்கள் ஏன் அறிந்திருக்கிறார்கள்?
ஒரு நபரை மனிதனுக்கு அப்பாற்பட்ட ஓர் ஆவியுடன் இணைய வழிசெய்வதே யோகாசனத்தின் குறிக்கோள். கடவுளுடைய வழிநடத்துதலுக்கு எதிராக யோகாசனம் இயல்பாக சிந்திக்கும் திறனை தடை செய்வதை உட்படுத்துகிறது. (ரோமர் 12:1, 2) யோகாசனம் ஒரு நபரை ஆவியுலக கொள்கை, மாயமந்திர பழக்கம் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட ஆபத்துகளில் சிக்க வைக்கலாம். (உபாகமம் 18:10, 11)—8/1, பக்கங்கள் 20-2.