கேள்விப் பெட்டி
◼ கிறிஸ்தவ பெற்றோரின் இளம் பிள்ளைகள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளென அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னால் எந்த அளவுக்கு அவர்கள் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளலாம்?
கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகள் யெகோவாவின் முதிர்ச்சியடைந்த பயபக்தியுள்ள ஊழியராக வளரவேண்டுமென விரும்புகின்றனர். (1 சாமு. 2:18, 26; லூக். 2:40) வெகு இளம் வயதிலேயே, கிறிஸ்தவ குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் பைபிளில் ஆதாரங்கொண்ட தங்கள் விசுவாசத்தை ஆதரித்துத் தெளிவாக எடுத்துக்கூறக் கூடியவர்களாக இருக்க வேண்டும். பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே தங்கள் பெற்றோருடன் வெளி ஊழியத்துக்குச் செல்கையில் அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி விரைவுபடுத்தப்படுகிறது. ஆனால் அவர்கள் வெளி ஊழியத்தை அனுபவித்து மகிழவும், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாகும்படி விரும்பவும், ராஜ்ய-பிரசங்க வேலையில் தொடர்ந்து பங்குகொள்ளவும் வேண்டுமென்றால் இளைஞர்கள் இருதயத்திலிருந்து தூண்டப்படுவது முக்கியம். பெற்றோர் அவர்களைக் கவனமாய்ப் பயிற்றுவிப்பது தேவைப்படுகிறது. (1 தீமோ. 4:6; 2 தீமோ. 2:15) பெற்றோர் சம்மதித்தால் தகுதிபெற்ற மற்றப் பிரஸ்தாபிகள் சில சமயங்களில் உதவிசெய்யலாம்.—நம்முடைய ஊழியம், பக்கங்கள் 99-100-ஐப் பாருங்கள்.
நல்ல முறையில் நடந்துகொள்ளும் பிள்ளைகள் தங்கள் கிறிஸ்தவ பெற்றோருடன் வீட்டுக்குவீடு வேலைக்குச் செல்கையில், ஊழியத்தில் எவ்வாறு ஈடுபடுவதெனக் கற்றுக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் ஓரளவு திறமையையும் தேர்ச்சியையும் தங்களில் வளர்க்கும்வரை முழுக்காட்டப்படாதப் பிரஸ்தாபிகளென அங்கீகரிக்கப்படுவதில்லை. கிறிஸ்தவ பெற்றோர், தங்கள் பிள்ளைகளோடு ஒன்றாக வேலைசெய்கையில் சாட்சி கொடுப்பதில் எந்த அளவுக்கு ஒரு பிள்ளை பங்குகொள்ள முடியுமென்பதைத் தீர்மானிக்கலாம். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக இன்னும் அங்கீகரிக்கப்படாத பிள்ளைகள் தங்கள் சொந்தமாக சந்திப்புகள் செய்யக் கூடாது அல்லது மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து வெளி ஊழியத்துக்குச் செல்லக்கூடாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெளி ஊழியத்துக்காக ஆயத்தம் செய்து, வேதவசனம் ஒன்றை வாசிப்பது, துண்டுப்பிரதியை அல்லது ஒரு பத்திரிகையை அளிப்பது, அல்லது பிரசுரங்கள் ஒன்றிலுள்ள படவிளக்கத்தை வீட்டுக்காரருக்குக் காட்டுவது போன்ற பல்வேறு வழிகளில் பங்குகொள்ள அவர்களை அனுமதிக்கலாம். பிள்ளை பெரியவனாகப் படிப்படியாய் வளருகையில், கலந்துபேசுவதில் மேலும் அதிக அளவில் பங்குகொள்ளக் கூடியவனாகலாம்.
சரியான பயிற்றுவிப்புடன், இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் வழிநடத்துதலுக்குப் பிரதிபலித்து தங்களை ஒழுங்கான முறையில் நடத்திக்கொண்டு வருகையில் ஊழியத்தின் பயபக்திக்குரிய தன்மையை மதித்துணரக் கற்றுக்கொள்கின்றனர். மற்றவர்கள் அவர்களைக் கவனித்துக்கொள்ளும்படி எதிர்பார்த்து, பெற்றோர், முழுக்காட்டப்படாதப் பிரஸ்தாபிகளாக இன்னும் அங்கீகரிக்கப்படாதத் தங்கள் பிள்ளைகளை வெளி ஊழியத்துக்காகக் கூடும் கூட்டத்தில் விட்டுச் செல்லக்கூடாது. அக்கறையுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை மேற்பார்வையிடும் தங்கள் சொந்தப் பொறுப்பை உணர்ந்து ஏற்கின்றனர். நிச்சயமாகவே, ஊழியத்தில் யெகோவாவைச் சேவிப்பதில் உண்மையான அக்கறை காட்டும் சபையிலுள்ள இளம் பிள்ளைகளின் பயிற்றுவிப்பில் உதவிசெய்ய, பொறுப்புவாய்ந்த மற்ற பிரஸ்தாபிகள் மனமுள்ளோராய் இருக்கலாம்.