காப்பாற்றும் பணியில் நீர்யானை!
நான்கு டன் வரையான எடையுள்ள நீர்யானை, நிலத்தில் காணப்படுவதிலேயே இரண்டாவது மிகப் பெரிய பாலூட்டியாக இருக்கிறது. அதன் சக்திவாய்ந்த தாடைகள், ஒரு கடியில் ஒரு படகைப் பிளந்துவிட முடியும். இதன் காரணமாக—மிகைப்படுத்தாமல் சொல்லவேண்டுமானால்—ஜிம்பாப்வியிலுள்ள ஹவாங்கி தேசிய பூங்காவிலுள்ள ஒரு தொகுதியினர், தங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீர்யானை ஒன்று வழக்கத்திற்கு மாறான விதத்தில் நடந்துகொண்டதைக் கண்டபோது முற்றிலும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஓர் அணைக்கட்டிற்கு அருகிலிருக்கையில், அந்த மனிதர்கள், இரண்டு இம்பாலாக்களை (ஆப்பிரிக்க மான்வகை) ஒன்பது காட்டு நாய்கள் கடுமையாகத் துரத்திக்கொண்டு செல்வதைக் கண்டார்கள். தப்பிப்பதற்கு எந்த வழியையும் காணாமல், அந்த இம்பாலாக்கள் தண்ணீருக்குள் வேகமாக இறங்கின. இம்பாலாக்கள் பெரும்பாலும் எங்கிருந்து வெளிவரும் என எதிர்நோக்கிக்கொண்டு, அந்த நாய்கள் நீரின் கரையோரமாக வேகமாக உலாத்திக் கொண்டிருந்தன.
முடிவாக, களைத்துப்போயிருந்த ஒரு இம்பாலா, நாய்கள் காத்திருப்பதை உணராமல் தொலைவிலுள்ள ஒரு கரையை நோக்கி நீந்த ஆரம்பித்தது. என்றபோதிலும், அந்த இம்பாலா கரைக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, அருகிலிருந்த நீர்யானை ஒன்று அந்த இம்பாலாவை நோக்கி நீந்துவதை அந்த மனிதர்கள் கண்டார்கள். அதைச் சென்றெட்டியதும், அந்த நீர்யானை “அதை முழுமையாக திரும்பும்படி செய்து, மெதுவாக இடித்து, எதிர்த்திசையில் நீந்தும்படி கட்டாயப்படுத்தியது,” என்று ஆப்பிரிக்க வனவாழ்க்கை (African Wildlife) பத்திரிகை அறிக்கை செய்தது. இம்பாலா கீழ்ப்படிந்தது. இம்பாலா ஆட்டங்காணும் அறிகுறிகளைக் காட்டியபோது நீர்யானை அவ்வப்போது ஒரு இடியைக் கொடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தது.
இம்பாலா நீரின் கரையோரத்தை அடைந்தபோது, அந்த நீர்யானை மெதுவாக ஆனால் உறுதியாக அந்த இம்பாலாவை கரைக்குத் தள்ளுவதை அந்த மனிதர்கள் கண்டார்கள். அந்த இம்பாலா ஒருசில தடுமாற்றமான அடிகளை எடுத்துவைத்து, பின்னர் நிறுத்திவிட்டு, நடுங்கிக்கொண்டு நின்றது. சீக்கிரத்தில், இம்பாலா தண்ணீரைவிட்டு நடந்துசெல்ல ஆரம்பித்தது. இரண்டும் காட்சியிலிருந்து மறையும் வரையாக நீர்யானை அதைப் பின்தொடர்ந்தது.
மற்ற இம்பாலாவுக்கு என்ன ஆயிற்று? காட்டு நாய்கள் “இந்தக் காப்பாற்றுப் பணியை உற்றுநோக்குவதில் அவ்வளவு மூழ்கியிருந்ததால், மற்ற இம்பாலா யார் கண்ணிலும் படாமல் தப்பித்துச் சென்றது,” என்று அந்த மனிதர்கள் கூறுகின்றனர்.