கேள்விப் பெட்டி
◼ தபால் மூலம் சாட்சி கொடுக்கையில் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
தபால் மூலம் சாட்சி கொடுப்பது நற்செய்தியை அறிவிப்பதற்கு நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் திறம்பட்ட முறையாகும். இருந்தாலும், இன்றைய உலக நிலைமை மோசமாக இருப்பதால், முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் தபாலை பிரித்துப் பார்க்க மக்கள் பயப்படுகிறார்கள். முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் கடிதங்களை அல்லது அனுப்புநர் முகவரி இல்லாத கடிதங்களை—முக்கியமாக கையினால் விலாசம் எழுதப்பட்டதாகவும் உறை பெரிதாகவும் இருந்தால்—பொதுவாக சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பர். அப்படிப்பட்ட தபாலை பிரித்துப் பார்க்காமலேயே வீட்டுக்காரர் தூக்கியெறிந்து விடலாம். இவ்வாறு ஏற்படாமல் நாம் எப்படி பார்த்துக் கொள்ளலாம்?
முடிந்தவரை கடிதத்தையும் கடித உறையில் விலாசத்தையும் டைப் செய்ய வேண்டும். கடிதத்தை வீட்டுக்காரரின் பெயருக்கே அனுப்ப வேண்டும். “குடியிருப்பவர்” என்று முகவரியிட்டு அனுப்பாதீர்கள். அதோடு, எப்பொழுதும் அனுப்புநரின் விலாசத்தை எழுதுங்கள். உங்களுடைய தனிப்பட்ட விலாசத்தை எழுதுவது பொருத்தமற்றதாக தோன்றினால், உங்களுடைய பெயரையும் ராஜ்ய மன்றத்தின் விலாசத்தையும் கொடுங்கள். பெயரோ முகவரியோ இல்லாமல் மொட்டைக் கடிதாசி அனுப்பாதீர்கள். ஒருபோதும் கிளை அலுவலகத்தின் விலாசத்தை பயன்படுத்தாதீர்கள்.—நம் ராஜ்ய ஊழியம், நவம்பர் 1996-லுள்ள கேள்விப் பெட்டியைக் காண்க.
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற புத்தகத்தில் பக்கம் 71-3-ல் கூடுதல் குறிப்புகளையும் மாதிரி கடிதத்தையும் காணலாம். நற்செய்தி மற்றவர்களை சென்றெட்டுவதற்கு கடிதங்களைத் திறம்பட பயன்படுத்த இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.