கேள்விப் பெட்டி
◼ நம்முடைய பிரசுரங்களில் உள்ள கூப்பன்களை யார் பூர்த்தி செய்ய வேண்டும், பைபிள் படிப்பு வேண்டுமென இன்டர்நெட் மூலம் யார் கேட்க வேண்டும்?
ஆர்வமுள்ள நபர்கள் நம்முடைய பிரசுரங்களில் உள்ள கூப்பன்களைப் பயன்படுத்தி, பிரசுரங்களைக் கேட்டு கிளை அலுவலகத்திற்கு எழுதலாம் அல்லது யெகோவாவின் சாட்சிகள் தங்களை வந்து சந்திக்க வேண்டுமென கேட்டு எழுதலாம். அதோடு, பைபிள் படிப்பு வேண்டுமென www.watchtower.org என்ற வெப்சைட் மூலம் கேட்கலாம். சத்தியத்தைக் கற்றுக்கொள்ள இவை அநேகருக்கு உதவியிருக்கின்றன. என்றாலும், பிரஸ்தாபிகள் தங்களுடைய உறவினர்களுக்கோ தங்கள் நண்பர்களுக்கோ தெரியாமல் அவர்களுக்காகப் பிரசுரங்களைக் கேட்க அல்லது பைபிள் படிப்பைக் கேட்க இவற்றைப் பயன்படுத்தும்போது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த வேண்டுகோளுக்கு இணங்கி கிளை அலுவலகம் பிரசுரங்களை அனுப்பி வைத்தபோது, அவர்களில் சிலர் நம்முடைய அமைப்பு அவர்களைத் தொந்தரவு செய்வதாகவும், தவறாமல் பிரசுரங்களை அனுப்புவதற்கான பட்டியலில் தங்களைச் சேர்த்திருப்பதாகவும் புகார் செய்திருக்கிறார்கள். இப்படிப் பிரசுரங்களையோ பைபிள் படிப்பையோ கேட்காத ஒரு நபரை பிரஸ்தாபிகள் போய் பார்த்தபோது, அவர்கள் எரிந்துவிழும் விதத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள். எனவே, பைபிள் படிப்புக்காக இன்டர்நெட்டில் கேட்பது அல்லது கூப்பன்களைப் பூர்த்தி செய்து அனுப்புவது போன்றவற்றை ஆர்வமுள்ள நபர்கள்தான் செய்ய வேண்டும். மற்றவர்களுக்காகப் பிரஸ்தாபிகள் அவற்றைப் பூர்த்தி செய்து அனுப்பக் கூடாது. ஒருவேளை அப்படி மற்றவர்களுக்காகப் பிரஸ்தாபிகள் அனுப்பி வைத்தால், அவை நிராகரிக்கப்படும்.
அப்படியானால், நமக்குத் தெரிந்தவர்கள் அல்லது நம் உறவினர்கள் கடவுளை பற்றி அறிந்துகொள்ள நாம் எப்படி உதவலாம்? நம்முடைய பிரசுரங்களை கொடுக்க விரும்பினால், அதை ஒரு அன்பளிப்பாக அவர்களுக்கு நீங்களே அனுப்பி வைக்கலாமே! ஒருவேளை அவர் ஆர்வம் காட்டியிருந்தால், சாட்சிகள் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டிருந்தால், அங்குள்ள சபை மூப்பர்களைத் தொடர்புகொள்ளுங்கள்; அப்படித் தொடர்புகொள்ள முடியாவிட்டால், தயவுசெய்து போய்ப் பார்க்கவும் (S-43-E) படிவத்தைப் பூர்த்தி செய்து உங்கள் சபை செயலரிடம் கொடுங்கள். அவர் அதைச் சரிபார்த்து, கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார். என்றாலும், ஆர்வம் காட்டிய நபர் சிறைச்சாலையிலோ, மறுவாழ்வு மையத்திலோ இருந்தால் அவரைச் சந்திக்கும்படி கேட்டு கிளை அலுவலகத்திற்கு நீங்கள் எழுதக்கூடாது. அதற்குப் பதிலாக, அந்த மாதிரி இடங்களுக்குச் சாட்சி கொடுக்க வருகிற சகோதரர்களை அவரே தொடர்புகொள்ளும்படி அல்லது கிளை அலுவலகத்திற்கு அவரையே எழுதும்படி நீங்கள் ஊக்குவிக்கலாம்.